பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Monday, September 19, 2011

கம்சன் அனுப்பிய மல்லர்களை கொன்ற கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜ பெருமாளாக தரிசனம் தருகிறானே! - 1


1168
வாட மருது இடை  போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்* 
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்* 
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்ரகூடத்துள்ளானே*3.3.1

விளக்கம்:-
உரலில் கட்டப்பட்ட குழந்தை கண்ணன் நெருக்கமான இரண்டு மருத மரங்களின் இடையே 
போய் மரங்களை முறித்து இருவரின் சாபம் நீக்கியவனும், கம்சன் அனுப்பிய பயில்வான்களை
கொன்றவனும், நடை பழகுவது போல ஆடி கொண்டு நல்ல பிள்ளையை போல குதிரை 
வடிவில் வந்த கேசி என்ற அரக்கனை கொன்றவனும்,

திரண்டு வந்த பலத்த மழையால் பசு மேய்ப்பவர்களுக்கும், பசுக்களுக்கும் ஏற்பட்ட 
துன்பத்தை போக்குவதற்காக மலையை குடையாக எடுத்தவன்  கூத்தன் என சொல்லும்படியாக 
என் முன்னே நடனமாடி கொண்டே வருகின்றான்அப்பெருமான் ஓங்கிய பூஞ்சோலைகள் 
சூழ்ந்த சிதம்பரம் எனப்படும் தில்லை சித்ரகூடத்துள்ளானே!


மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
வாட மருது இடை  போகி - பொலிவு இழந்து (கீழே முறிந்து விழும்படி) மருத (மரங்களின்)
நடுவே போகி 


மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு - பயில்வான்களை கொன்று நடை பழகிய படி 



ஆடல் நல் மா உடைத்து - ஆடி (கொண்டு) நல்ல பிள்ளையை (போல் வந்த) குதிரையை 
அழித்து 


ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் - பசு மேய்ப்பவர்களுக்கும் பசுக்களுக்கும் முன்பு  
துயரம் தீர்ப்பதற்காக 
கூடிய மா மழை காத்த - திரண்ட பலத்த மழையை காத்த 


கூத்தன் என வருகின்றான் - கூத்தன் என (சொல்லும்படியாக என் எதிரில் நடனம் ஆடி 
கொண்டே) வருகின்றான் (அவன்)

சேடு உயர் பூம் பொழில் - இளமை (தங்கிய) உயர்ந்த பூஞ்சோலைகள் (சூழ்ந்த) 
தில்லைச் சித்ரகூடத்துள்ளானே - தில்லைச் சித்ரகூடத்துள்ளானே


அருமையான பாசுரத்தில் வரும் முதல் கதை
"உரலில் கட்டப்பட்ட கண்ணன் செய்த லீலை"
நளகூபன், மணிக்ரீவன் என்ற அவ்விருவரும் குபேரனின் பிள்ளைகள்.
பெருஞ்செல்வத்தால் ஆணவம் கொண்டிருந்த அவர்கள் இருவரும் கந்தர்வப்
பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது 
தற்செயலாக நாரத முனிவர் அவ்விடத்தைக் கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும்
அந்த கந்தர்வ பெண்கள் நடுநடுங்கி விரைவில் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டு
அவரை வணங்கி நின்றனர்.

ஆனால் குபேரனின் பிள்ளைகளோ, மிதமிஞ்சிய மது மயக்கத்தாலும் தங்கள் ஆணவத்தாலும் 
நாரதர் வந்ததையே கவனியாமலும் தங்கள் ஆடைகளை அணியாமலும் இருந்தனர். இதைக்
கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக
மாறக் கடவது என்று சாபமளித்தார். அவரது சாபத்தைக் கேட்டு தன் நிலையறிந்த இருவரும் 
நாரதரிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் சாபத்திற்கு விமோசனத்தை அருளும்படி வேண்டினர்.

அவர்கள்பால் இரக்கம் கொண்ட முனிவரும், ஸ்ரீமந்நாராயணன் பூமியில் கண்ணனாக
அவதாரம் எடுக்கும்போது உங்களுக்கும் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார்.
அதற்கான காலமும் வந்தது . ஒரு நாள் நம் கண்ணன் வெண்ணெய் உண்டதால் அம்மா யசோதை 
குழந்தை கண்ணனை உரலில் கட்டிவிட உரலோடு இழுத்து கொண்டு ஒன்றுகொன்று அருகில் 
நின்றிருந்த இரு மருத மரங்களின் இடையில் புகுந்து சென்றதால் மரம் இரண்டாக உடைய 
அவர்களுக்கு சாப விமோசனம் கிடைத்தது.குபேரனின் குமாரர்களும், கண்ணனை வணங்கி 
தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.


அருமையான பாசுரத்தில் வரும் இரண்டாம் கதை
" மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்"
கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப்
போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு
 கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான். சாணூரன், சலன் முதலிய
மல்லர்களை அழைத்து, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மகன்களான கண்ணன்
பலராமன் இவர்களால்தான் எனக்கு மரணம் என்று விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நான் ஏற்பாடுசெய்துள்ள மல்யுத்தத்திற்கு அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம்செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்என்று ஆணையிட்டான். ஆனால் அதற்க்குமுன்பே கண்ணனை கொல்ல மேலும் ஒரு வழியை ஏற்பாடு செய்தான்

குவலயாபீடம்என்னும் போர் யானையின் பாகனை அழைத்து மல்யுத்தம் காணவரும்
கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால்,
மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் 
போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்


அருமையான பாசுரத்தில் வரும் மூன்றாம் கதை
"குதிரை வடிவில் வந்த அரக்கனை கொன்ற கண்ணன்"
கம்சன் கேசி என்ற அரக்கனை அழைத்து, நீ கோகுலம் சென்று நந்தகோபரின் மகன்கள்
கண்ணனையும், பலராமனையும் கொன்றுவிட்டு வா என்று கட்டளை இட்டு அனுப்பினான்.
கம்சன் அனுப்பிய கேசி என்ற அரக்கன் மிக பெரிய குதிரை வடிவில் கண்ணனை
கொல்ல வந்ததை அறிந்து, தன்னோட கையை குதிரை வாயில் வைத்து, வாயை
பிளந்து கேசி என்ற அரக்கனை கொன்றான்

அருமையான பாசுரத்தில் வரும்  நான்காம்  கதை
"கோவர்த்தன மலையை தூக்கிய கண்ணன்"
ஒரு சமயம் ஆயர்பாடி மக்கள் பழைய நடைமுறைப்படி பலவகையான படையல்களிட்டு 
இந்திரனைச் சிறப்பு செய்யும் இந்திர விழாவினை, செய்ய வரும்போது, தேவர்களின் தலைவன் 
என்ற கர்வம் இந்திரனுக்கு இருந்த படியால் நம் அன்பு கண்ணன் வீணாக இந்திரனுக்கு பூஜை 
செய்யாதீர்கள். அதற்க்கு பதில் பசுக்கள் பசிதீர புல் மேயும் கோவர்த்தன மலைக்குச் செய்யுமாறு 
ஆயர்களிடம் கூறினான். ஆயர்களும் அவ்வண்ணமே செய்ய,கோபமுற்ற இந்திரன், ஆயர்ப்பாடியில் 
பயங்கர ஆலங்கட்டி மழையை பொழிய செய்தான். மழையிலிருந்து ஆயர்களையும், பசு க்களையும் 
காக்க, கண்ணன், மிக பெரிய கோவர்த்தன மலையையே தூக்கி குடையாய்ப் பிடித்து, அதனடியில் அனைவரையும் நிற்க வைத்து, கொடிய  மழையிலிருந்து அனைவரையும் காத்தான்.

No comments: