பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Tuesday, August 31, 2010

சாளக்கிராமம் அடை நெஞ்சே!- திருமங்கை ஆழ்வார் (988-997)


Sri Moorthy Perumal - Thiru Saalagiraamam

பெரிய திருமொழி
988
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்*
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து*
மலை கொண்டு அலைநீர் அணைகட்டி மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன்*
தலை பத்து அறுத்துகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.1

விளக்கம்:-

மான்களும், யானைகளும், குதிரைகளும் திரியும் காட்டை கடந்து போய் வில்லையும் அம்பையும் துணையாக கொண்டு வெற்றி தரும் போர் களத்துக்கு சென்றான்.. அது மட்டுமா அந்த காலத்துலேயே அனுமன் மற்றும் அவரோட நண்பர்கள் துணையோடு மலைகளை கொண்டு அலை சூழ்ந்த பெரிய கடலில் பிரிட்ஜ் கட்டி, பெருசு பெருசா சுவரையையும், கடலையும் கொண்ட இலங்கையில் கத்தியை கையில் வைத்துள்ள அரக்கர்கள் தலைவனான (அந்த ராஸ்கல்) இராவணனின் பத்து தலைகளையும் அறுத்து மகிழ்ந்தான்.
(தயவு செய்து எங்க ஸ்ரீ ராமர் வசிக்கும்) சாளகிராமம் அடை நெஞ்சே!

989
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்*
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்*
இடம் சூழ்ந்து எங்கும் இருவிசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்*
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.2

விளக்கம்:-

நல்லா மதம் பிடித்த யானைகளும், குதிரைகளும், சத்தத்தோடு வரும் பெரிய தேரும் , நின்று சண்டை போடும் போர் வீரர்களும், சூழ்ந்து காணப்படும் காவல் கொண்ட இலங்கையை (மொளகா பொடி மாதிரி) பொடி பொடியா ஆக்குவதற்கு கூரான அம்புகளை அற்புதமா விட்ட (எங்க ஸ்ரீ , ராமரை) பெரிய வானத்தில் உள்ள தேவர்கள் நிலத்தில் எல்லா இடமும் சூழ்ந்து வணங்க வசதியா நல்ல வாசனையுள்ள மலர்கள் நிறைந்துள்ள குளங்களால் சூழப்பட்டு எங்கும் அழகாக காட்சி அளிக்கும் சாளகிராமம் (தயவு செய்து) அடை நெஞ்சே!

990
உலவு திரையும் குலவரையும் ஊழி முதலா எண் திக்கும்*
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறலாழி வலவன்*
வானோர் தம்பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.3

விளக்கம்:-

எப்பவுமே உலாத்தி கொண்டிருக்கும் கடல் அலையும், மலையும், (Daily வரும்
நாட்கள் அதாங்க காலம் அதோடு எட்டு திசைகள், நிலா, அப்புறம் சூரியன், இருளும் ஆக நின்றான் (அப்பா! அப்பப்பா எல்லாமே அவர்தாங்க! யாரு! தெரியுமா! இதோ!) வெற்றி ஒன்றையே தரும் சக்கரத்தை வலக்கையில் வைத்து கொண்டிருக்கும் தேவர்களுக்கும் தேவன் (எம் பெருமான்) அவரிடம் நெருங்காத, சரணடையாத (நீ என்ன சொல்றது! நான்தான் அப்படின்னு திமிரா இருக்கிற அரக்கர்களுக்கு எப்பவுமே பகைவன்.(தயவு செய்து எம் பெருமான் வசிக்கும்) நீரால் சூழப்பட்டு அழகாக காட்சி அளிக்கும் சாளகிரமம் அடை நெஞ்சே!


991
ஊரான் குடந்தை உத்தமன் ஒருகால் இருகால் சிலை வளைய*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வருபுனல் சூழ் பேரான்*
பேராயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*
தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.4

விளக்கம்:-

திரு ஊரான், திருகுடந்தை உத்தமன் ,ஒரு முறை என்ன செஞ்சான்னா!
பெரிய வில்லை வளைத்து நன்மை எது என்றே! ஆராயாம (எங்க ஸ்ரீ ராமரோடு போரிட வந்த ) அரக்கர் சேனைகளை ஒட்டுமொத்தமாக அழித்தான். வற்றாத காவிரி ஆறு சூழ்ந்த திருபேரான்.. அவனோட பெயரும் ஆயிரம். (ஏ மனமே!) துளசி மாலையை அணிந்தவன் எம்பெருமான். சிறகுகள் உடைய வண்டுகள் ஆரவாரம் செய்யும் தாரா என்னும் நீர் பறவை நிறைந்துள்ள வயல்கள் சூழ்ந்த இடத்தில இருக்காரு! தயவு செய்து எம்பெருமான் வசிக்கும் இடமான சாளகிராமம் அடை நெஞ்சே!


992
அடுத்தார்த்தெழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு ஆயில் வாளால் விடுத்தான்* விளங்கு சுடராழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்*
கடுத்தார்த் தெழுந்த பெருமழையைக் கல் ஒன்று ஏந்தி இனநிரை காத்தடுத்தான்*
தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.5

விளக்கம்:-

ஒரே அட்டகாசம் ஆரவாரம் செய்து கொண்டு தன்னை அணுகி வந்த அரக்கி
சூர்பனகையின் குகை போன்ற வாயை தொறந்து அலறும்படி அவள் மூக்கை கூறிய வாளால் அறுத்தான். பளிச்சுன்னு இருக்கிற சங்கை வைத்துள்ளவன். வானத்தில் உள்ள தேவர்களுக்கும் பெருமான் (என்ன செஞ்சாருன்னா!) முன் பகையால் கோபம் கொண்டு ஆரவாரம் செய்து கொண்டு வந்த பிச்சிக்கிட்டு அடிக்கும் பயங்கர மழையை பெரிய மலையை கையில் தூக்கி (மழை , புயல் தாக்காதவாறு) பசு கூட்டங்களை காப்பாற்றினான். (மனமே தயவு செய்து இப்படிப்பட்ட நல்லவன் எம் கண்ணன் வசிக்கும் இடமான) குளம் சூழ்ந்து அழகாக காட்சி அளிக்கும் சாளகிரமம் அடை நெஞ்சே!

993
தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான்*
தூய அரியுருவிர் குறள் ஆய்ச் சென்று மாவலியை ஏயான் இரப்ப*
மூவடி மண் இன்றே தாவென்று உலகேழும் தாயான்*
காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.6

விளக்கம்:-

அம்மா மாதிரியே உருவு எடுத்து வந்த பேயான பூதனையின் உயிரையும், தயிரும் வெண்ணையும் சேர்த்து உண்ட வாயான். பிறரிடம் மன்றாடி பொருள் கேட்கும் தொழிலை செய்யாதவன் . தூய்மையான குட்டி குள்ளமா வடிவம் எடுத்து (வாமனனா) சென்று மாவலியிடம் கை நீட்டி மூன்று அடி மண் இன்று எனக்கு கொடுக்கிறியா! என்று கேட்க (ஹூம் ஜுஜூபி மூன்று அடிதானே எடுத்துக்கோ! என்பது போல மாவலியும் சம்மதிக்க உடனே வாமனான நம்ம குள்ள பெருமாள் திரிவிக்ரமனாக பெரிய உருவம் எடுத்து இரண்டே அடியில் உலகம் அளந்தான்.எம் உலகளந்த பெருமாள்) ஏழு உலகங்களுக்கும் தாய் ஆனவன் தெரியுமா! (காயா மலரை போல நீல கலருடையவன்! தயவு செய்து) காயா மலர் வண்ணன் வசிக்கும் இடமான சாளகிராமம் அடை நெஞ்சே!

994
ஏனார் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை*
ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் தானே இருசுடராய்*
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும் தானாய்*
தானும் ஆனான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.7

விளக்கம்:-

சுற்றி இருக்கிறவங்க (அரக்கர்கள்) பயப்படும்படி அந்தி சாயும் மாலை வேளையில் நரசிம்ம உருவெடுத்து பருத்த நல்ல குண்டா இருந்த இரணியனின் பெரிய உடலை பிளந்த ஒருவன் (என் செல்லம் என் நரசிம்மன்) சந்திரனாகவும் , சூரியனாகவும் , வானமாகவும் , நெருப்பாகவும் , காற்றாகவும், மலையாகவும் , கடலாகவும், உலகம் எல்லாம் தானாய், தானே தானும் ஆனான் .( தயவு செய்து அவன் வசிக்கும் இடமான)
சாளகிராமம் அடை நெஞ்சே!

My Heart going to Saalagiraamam

995
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து*
ஓர் சந்தார் தலைக்கொண்டு உலகேழும் திரியும் பெரியோன் தான் சென்று*
என் எந்தாய்! சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திருமார்பில் தந்தான்*
சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.8

விளக்கம்:-

வெந்து போன எலும்பையும் , சுடுகாட்டு சாம்பலையும் உடம்புல அணிந்து பூசி கையில மண்டை ஒட்டு தலையை வச்சிக்கிட்டு உலகம் முழுதும் (உலகம் சுற்றும் வாலிபன் போல)சுற்றி கொண்டு திரியும் பெரியவர் எம் ஈசன் பெருமாளிடம் சென்று அச்சோ! என்னோட தந்தையே! (பிரம்மன் தலையை வெட்டியதால் வந்த) சாபம் தீர்க்கணும் என்று கேட்க (பரம்பொருளான பெருமாளின் எச்சிலும் அமுதம்! வியர்வையும் அமுதம் தெரியுமா! கேட்டவுடனே நம்ம ஹீரோ பெருமாள்) தன்னோட
திரு மார்பில் இருந்து அமுத நீரை கபாலத்தில் இட்டு ஈசனின் சாபம் தீர்த்தார். (தயவு செய்து எம்பெருமான் வசிக்கும் ) சந்தன மர சோலைகள் நிறைந்த சாளகிராமம் அடை நெஞ்சே!


996
தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பின் அந்தணரும்*
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகெல்லாம்*
வண்டார் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய*
தண் தாமரைகள் முகமலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.9

விளக்கம்:-

தொண்டு செய்பவர்களும் , தேவர்களும் , பூணூல் மார்பில் அணிந்த பிராமணர்களும், உலகங்களின் தலைவனே எமக்கே அருள் புரிய வேண்டும் என்று ஒன்று சேர்ந்து வழிபடும் கோவில் பக்கத்தில வண்டுகள் சத்தம் விடும் அழகான தோட்டத்துல உள்ள மருத நிலத்து வயலில் உள்ள நீரில் வெளியூர்ல இருந்து கயல் மீன்கள் ஒரே பாய்ச்சலா பாய்ந்து பூந்து விளையாடுதுங்க! இதை பார்த்து சில்லுன்னு குளிர்ந்த தாமரைகள் (ஈன்னு இளிச்சுக்கிட்டு) முகம் மலர (அப்ப்பப்பா! இவ்ளோ அழகான ஊரில் எம்பெருமான் வசிக்கிறாரே! தயவு செய்து) சாளகிராமம் அடை நெஞ்சே!

997
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய் தமிழ்மாலை*
ஆரார் உலகத்து அறிவுடையார் அமரர் நன்னாட்டு அரசாள*
பேராயிரமும் ஒதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே*1.5.10

விளக்கம்:-

தாரா நீர் பறவைகள் வாழும் வயல்கள் சூழ்ந்த அழகான சாளகிராமத்தில் வசிக்கும் எம் அடிகளை எம் பெருமானை கரிய காடுகள் நிறைந்த திருமங்கை நாட்டு மன்னன் கலியன் பாடிய தமிழ் மாலையை இந்த உலகத்தில் அறிவு உடையவர்களே! வானோர் நல்ல நாட்டை அரசாள வேண்டுமானால் (அந்த அளவுக்கு உங்களுக்கு திறமை வந்து விடும்) எம்பெருமானின் பெயர்கள் ஆயிரத்தை சொல்லுங்கள் அல்லது இந்த பத்து பாசுரங்களை ஆசையோடு எம்பெருமானை நினைத்து பிதற்றி கொண்டிருங்கள்,

Thiru Saalagiraamam - Mukthinath Temple


திருமங்கை ஆழ்வார் சொன்ன சாளக்கிராமம்
குத்தலம் நேபாள நாட்டில் உள்ள காட்மண்டு என்னும் நகரத்தின்
வடமேற்கில் 250 கி.மீ தொலைவில் உள்ளது. இது கண்டகி
நதிக்கரையில் உள்ள திவ்விய தேசமாகும்.
இதனை முத்திநாத் எனவும் வழங்குவர்.

பெருமாள்:- ஸ்ரீமூர்த்தி (நின்ற கோலம்)
தாயார்:- ஸ்ரீ தேவி நாச்சியார்


Thursday, August 19, 2010

திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே - திருமங்கை ஆழ்வார் (978-987)


பத்ரிநாத்
ஸ்ரீ பத்திரி நாராயணப் பெருமாள்


பெரிய திருமொழி


978
ஏனமுனாகி இருநிலமிடந்து அன்று இணையடி இமையவர் வணங்க*
தானவனாகம் தரணியில் புரளத்தடஞ்சிலை குனித்த வெந்தலைவன்,
தேனமர் சோலைக் கற்பகம் பயந்ததெய்வநன் நறுமலர் கொணர்ந்து*
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1

விளக்கம்:-
முன்னாடி வராக(பன்றி) அவதாரம் எடுத்து தண்ணிக்குள்ள மறைந்து இருந்த பூமியை தன்னோட கொம்பு நுனியால் மேலே தூக்கி வந்த
வராக பெருமாளின் திருவடியை தேவர்கள் வணங்குறாங்க,
அதுமட்டுமா! கொடிய அரக்கன் இரணியனின் உடம்பு மண்ணுல புரளும்படி
பெரிய வில்லை வளைத்த என் தலைவன் தேன் நிறைந்த கற்பக மலர்
சோலையில் தெய்வ தன்மை பொருந்திய நல்ல வாசனையுள்ள
மலர்களை கொண்டு வந்து வானவர்கள் வணங்கும் கங்கை கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!

979
கானிடை யுருவைச் சுடுசரம் துறந்து கண்டுமுன் கொடுந்தொழிலுரவோன்*
ஊனுடை அகலத்து அடுகணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வேம்மொருவன்*
தேனுடைக் கமலத் தயனொடு தேவர்சென்று சென்று இறைஞ்சிட* பெருகு
வானிடை முதுநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.2

விளக்கம்:-
காட்டுல (சீதையை மயக்க வந்த மாய மான்) மாயாவி மாரீசனை பார்த்து
நல்ல கூரான அம்புகளை சர சரன்னு அவன் மேல் விட்டவனும், முன்னாடி
கொடுமையான தொழிலை செய்தவனை (வாலி பல பெண்களை
கற்பழித்தான் அதற்கும் மேலே தன் தம்பி சுக்ரீவன் மனைவியையே
கற்பழிக்க வந்தான்..சுக்ரீவன் நம்ம ஸ்ரீ ராமரிடம் சரண் புகுந்து உதவி கேட்க)
நம்ம ஸ்ரீ ராமர் பெரிய உடம்பு உள்ள வலிமையான வாலியின் மீது கூரான
அம்பை பாய விட்டு அவன் உயிரை பறித்து மகிழ்ந்த எம் ஒருவன்
(ஸ்ரீ ராமர் எங்க இருக்கிறான் தெரியுமா!),
தேன் உடைய தாமரை பூவில் அமர்ந்து கொண்டிருக்கும் பிரம்மனோடு
தேவர்கள் அடிக்கடி சென்று தங்களுக்கு வேணும்ங்கறத வேண்ட,
வானம் அளவு உயர்ந்த கடல் நீர் போல மிகுந்திருக்கும்
கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!


980
இலங்கையும் கடலும் அடலருந்துப்பின் இருநிதிக் கிறைவனும்* அரக்கர் குலங்களுங்கெட முன் கொடுந்தொழில் புரிந்தகொற்றவன் கொழுஞ்சுடர் சுழன்ற*
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில்*வெண்துகிற் கொடியென விரிந்து*
வலந்தரு மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே 1.4.3

விளக்கம்:-
(யாராலயும் அவ்ளோ ஈஸியா போக முடியாது! (ஆனாலும் ஸ்ரீ ராமர் அப்பவே!
கடல்ல அனுமன் மட்டும் அவரோட நண்பர்கள் துணையோடு பிரிட்ஜ் கட்டி )
கடலை கடந்து இலங்கை சென்று மிக கடுமையான பலசாலியானவனும், நிறைய
செல்வங்களுக்கு இறைவனான இராவணனும் அவனோட அரக்க குலங்களும்
அழியும் படி சண்டையிட்ட எங்க ஸ்ரீ ராம ராஜா (இருக்குமிடம் எப்படி இருக்கு பாருங்க!)
மேல இருக்கிற வானத்துல தக தகன்னு கொழுந்து விட்டு எரிகிற சூரியன்
சுற்றி கொண்டே பனி மலை மேலே உராஞ்சிக்கிட்டு வெள்ளை கலர் துணில
ஆன கொடி போல அழகா விரிஞ்சி இருக்கு, அதோடு வளத்தோடு
பெருக்கெடுத்து ஓடும் தெளிந்த அழகான வற்றாத நீரான கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!

981
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு*
பிணி ஒழித்தமரர் பெருவிசும்பருளும் பேரருளாளன் எம்பெருமான்*
அணிமலார்க் குழலார் அரம்பையர் துகிலும்*ஆரமும் வாரி வந்து*
அணிநீர் மணிகொழித் திழிந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.4

விளக்கம்:-
துணிவுதான் இனிமேல் உனக்கு!மனமே! சொல்கிறேன் கேள்: (பெருமாளை) வணங்கி வழிபடும் தொண்டர்களாகிய நமக்கு எல்லாவித (பகை ,பிறவி,முதலான அனைத்து) நோய்களையும் ஒழித்த தெய்வம், பெரும் பரமபதத்தை (வைகுண்டம் பெருமாள்
இருக்குமிடம் மோட்சம்ன்னு சொல்வாங்க) பெற்று தரும் பேரருளாளன் எம்பெருமான்,
அழகான மலர் கூந்தலை உடைய வானத்தில் இருக்கும் தேவலோக அழகான
இளம் பெண்களின் உடைகளையும், மாலைகளையும், மணிகளையும் வாரி வந்து
அழகான நீர் அழகா அலை போல பாய்ந்து வந்து விழும்
கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!


982
பேயிடைக் கிருந்து வந்த மற்றவள்தன் பெருமுலை சுவைத்திட*
பெற்ற தாயிடைக் கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்*
சேய்முகட்டுச்சி அண்டமும் சுமந்த செம்பொன்செய் விளங்கலிலங்கு*
வாய்முகட்டிழிந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.5

விளக்கம்:-
(என்னோட கண்ணன் தைரியமா) தாய் போல வந்த பேயின் (பூதனையின்)
மடியில் இருந்து அவளுடைய பெரிய முலையை சுவைத்து கொண்டிருக்க,
பெற்ற தாயான யசோதை பேயின் மடியிலிருந்து என் குழந்தையை எப்படி
எடுப்பேன் என்று பயத்தில் நடுங்க, (துளியும் பயமில்லாம தைரியமா)
வளர்ந்த என் தலைவன், சிவந்த சிகரத்தின் உச்சியில் வானத்தையே சுமந்த,
(அந்த அளவுக்கு உசரமா இருக்குங்க)சுத்தமான தங்கம் போல தக தகன்னு
பிரகாசமா இருக்கிற இமயமலையில் ஆரம்ப இடத்திலிருந்து வந்து விழும்
கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!

பத்ரிநாத் ஆச்சிரமம்



983
தேர் அணங்கு அல்குல் செழுங்கையர் கண்ணி திறத்து ஒரு மறத்தொழில் புரிந்து*
பாரணங்கிமிலேரேழும் முன்னடர்த்த பனிமுகில்வண்ணன் எம்பெருமான்*
காரணந்தன்னால் கடும்புனல் கயத்த கருவறை பிளவெழக்குத்தி*
வாரணங்கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.. 1.4.6

விளக்கம்:-
தேர் வளைஞ்சு நெளிஞ்சு போற மாதிரி அழகா வளைஞ்சு நெளிஞ்சு மெலிசா இருக்கிற
இடையையும், கொழுத்த மீன் போல கண்களையும் உடைய நப்பின்னையை
கல்யாணம் பண்ணுவதற்காக (காளையை அடக்குபவனுக்குதான் பொண்ணு
கொடுப்பேன் என்று கண்ணனோட மாமா சொல்லிடாரு!) உலகமே பயப்படும்படியாக
பெரிய திமிலை உடைய ஏழு எருதுகளை வலிமையால் அடக்கிய குளிர்ந்த
மேகம் போல கலருடைய எம்பெருமான்,(மாமுனிவர் பகீரதன் செய்த தவத்தால்
தேவலோக கங்கை பூமியில இறங்கினாள்) கடுமையான நீர் வளத்தோடு கரிய
மலைகளை பிளந்து கொண்டு ,அங்கிருக்கும் யானைகளையும் அடிச்சிக்கிட்டு வரும்
கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!


984
வெந்திறல் களிறும் வேலை வாயமுதும் விண்ணொடு விண்ணவர்க்கரசும்*
இந்திரர்க்கருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்*
அந்தரத்தமரர் அடியிணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி*
மந்தரத் திழிந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.. 1.4.7

விளக்கம்:-
(பாற்கடலிலிருந்து) வெள்ள கலர்ல நிறைய திறமையுள்ள யானையையும் ,
சரியான நேரத்துல அமிர்தமும், விண்ணோடு, விண்ணுலகில் இருப்பவர்களின்
அரசனாக இருக்கும்படி இந்திரனுக்கு அருளி, எமக்கும் கொடுத்து அருளும்,
எம் தந்தை, எம் அடிகள், எம் பெருமான்,(என்ன செஞ்சாரு!
எங்க வசிக்கிரார்னு பாக்கலாமா!) மேலிருக்கும் தெய்வங்கள் அடியினை
வணங்குவதற்காக, (கங்கையில சேரக்கூடிய நீர்) ஆயிரம் முகங்களோடு அவ்ளோ
ஆவேசமா மந்திர கிரி மலையில் இருந்து இறங்கி வந்து விழும் கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!


985
மான் முனிந்தொரு கால் வரிசிலை வளைத்த மன்னவன் பொன்னிறத் துறவோன்*
ஊன்முனிந்து அவனதுடல் இருபிளவா உகிர்நுதி மடுத்து*
அயனரனைத் தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன்*
தவம் புரிந்து உயர்ந்த மாமுனி கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.. 1.4.8

விளக்கம்:-
சீதையை மயக்க வந்த மாய மானை அழிக்க அழகிய வில்லை வளைத்து
நச்சுன்னு அம்பு விட்டவன் , பொன் போல கலருடைய வலிமை வாய்ந்த
மன்னன் (அந்த ராஸ்கல்) இரணியனின் உடலை இருபிளவாக பிளக்க கூரான
நகத்தால ஒரே அமுக்கா அழுத்தியவன் , பிரம்மன் (தனது தலையில் ஒரு
தலையை வெட்டியதால் கோபம் கொண்டு) சிவனுக்கு கொடுத்த வலிமை
வாய்ந்த சாபத்தை நீக்கியவன், (எங்க இருக்கிறான் என்று தெரியுமா!
பகீரதன் தவம் புரிந்ததால் தேவலோகத்துக்கு மட்டுமே சொந்தமான கங்கை
பூமிக்கு வந்தாள்) தவம் புரிந்து உயர்ந்த மாமுனிவர் கொண்டு வந்த
கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!

986
கொண்டல் மாருதங்கள் குலவரைத் தொகுநீர்க் குரைகடல் உலகுடன் அனைத்தும்*
உண்டா மாவயிற்றோன் ஒன்சுடரேய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்*
அண்டமூடறுத்து அன்று அந்தரத்திழிந்து அங்கு அவனியால் அலமர*
பெருகும் மண்டு மாமணிநீர் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.. 1.4.9

விளக்கம்:-
மேகம், காற்று ,பெரிய மலை, சீறி வரும் கடல் அதோடு உலகம் முழுதும் உண்ட
பெரிய வயிற்றை உடையவனும், சந்திரனையும் சூரியனையும் பொருத்தி
தேவரும் யுகமும் அவனே ஆனான்.(அப்பேற்பட்ட எம்பெருமான் இருக்குமிடம்)
பூமியே நடுங்கும் படி (சும்மா அதிருதுல்ல) மேலிருந்து நாலாப்பக்கமும் சீறி
பாய்ந்து உலகமே அசையும் படி (அந்த அளவுக்கு ஆவேசமா) , வளத்தோடு
பெருக்கெடுத்து ஓடும் தெளிந்த அழகான வற்றாத நீரான கங்கையின் கரை மீதுள்ள
திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!


987
வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமதுள்ளானை*
கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாய் ஒலி செய்த பணுவல்*
வரம் செய்த இவை ஐந்துமைந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி*
இருங்கடல் உலகமாண்டு வெண்குடைக்கீழ் இமயவராகுவர் தாமே. . 1.4.10

விளக்கம்:-
பெரிசு பெருசா அலைகளும் , வற்றாத அழகான நீரும் உடைய கங்கையின் கரை
மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் இருப்பவனை , கடல் போல கலருடைய
பத்ரிநாத பெருமாளை எண்ணி கொண்டே கலியனாகிய நான் இசையுடன்
பாடிய வரம் பெற்ற இவை ஐந்தும் + ஐந்தும் (கூட்டி பாருங்க! எவ்ளோ) பத்தும்
(என்னை போலவே பெருமாளை எண்ணி கொண்டே) வல்லார்கள்
வானவர் உலகுடன் சேர்ந்து எல்லா வினைகளையும் அறுத்து உலகம் ஆண்டு
வெள்ளை நிற குடையின் கீழ் தேவர்களும் ஆவார்கள்.


திருமங்கை ஆழ்வார் சொன்ன வதரி உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தலம். திருவதரியாசிரமம் என்னும் பத்திரிநாத் ஹரித்துவாரிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து இமயமலையில் உள்ள பாதையில் செல்ல வேண்டும். அலகாந்தா நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. பனிபடர்ந்த சூழலில் இலந்தை மரக்காடுகள் நிறைந்துள்ள இடத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 23310 அடி உயரத்தில் உள்ளது. (பத்திரி - இலந்தை) ரிஷிகேசத்திலிருந்து தேவப் பிரயாகை, உருத்திரப்பிரயாகை, நத்தப் பிரயாகை, ஜோஷிமட் ஆகிய ஊர்கள் வழியாகப் பேருந்து மூலமாகப் பத்ரிநாத்தை அடையலாம்.

பெருமாள்:- ஸ்ரீ பத்திரி நாராயணப் பெருமாள்
தாயார்:- ஸ்ரீ அரவிந்தவல்லி நாச்சியார் - தனிச்சந்நிதி

Friday, August 6, 2010

வயசாவதர்க்கு முன் வதரிவணங்குதுமே - திருமங்கை ஆழ்வார் (968-977)



பெரிய திருமொழி

968
முற்றமூத்துக் கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல் தள்ளிமெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு,
உயிரை வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே. 1.3.1

விளக்கம்:-

நல்லா வயசாயிடிச்சி! கொம்பு வச்சிக்கிட்டு அடியை (தரை) பார்த்துகொண்டே கூன் வளைஞ்சு நடக்க கூட முடியாம அங்கங்க உட்கார்ந்து இளைப்பாறி (அப்பப்பா!) இப்படி தொல்லைங்க வருவதற்கு முன்னாடியே (இளமையாக இருக்கும் போதே) பெற்ற அம்மா மாதிரியே வந்த பேயின் பெரிய முலை பற்றி பாலோடு உயிரையும் அடியோடு வாங்கி உண்ட வாயன் (எம் கண்ணன் இருக்கும்) திருவதரி வணங்குவோம்

969
முதுகுபற்றிக் கைத்தலத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவாறென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டு பண்கள்பாடும் வதரிவணங்குதுமே. 1.3.2

விளக்கம்:-

கையில முதுகை பிடிச்சிக்கிட்டு இன்னொரு கையில கொம்பைவச்சிக்கிட்டு
உடல் நடுங்கி கண்ணு சுற்றி லொக்கு லொக்குனு இருமிக்கொண்டு செல்வதை பார்த்து அச்சச்சே! இந்த கிழவனை பாரேன்! என்று பொண்ணுங்க (பிகருங்க)கேலி செய்யும் முன் தேன் உண்ட வண்டுகள் இசைத்து பாடும் (எம் பெருமாள் இருக்கும்)
திருவதரி வணங்குவோம்!

970
உறிகள்போல்மெய்ந்நரம்பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே. 1.3.3

விளக்கம்:-

உறி கயிறு போல உடல் நரம்புகள் வெளிய நீட்டிக்கிட்டு உடல் தளர்ந்து உள்ளம் நொந்து போய் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி செல்ல முடியாமல் கண் சுற்றி அங்கங்க நின்று நடுங்கி கொண்டிருப்பதற்கு முன் ஏய்! மனமே நீ அறிந்து கொண்டாய் எனில் ஆயிரம் பெயர்கள் சொல்லி, தேன் நுகரும் வாசனையுள்ள வண்டுகள் இசை பாடும் (எம் பெருமாள் இருக்கும்) திருவதரி வணங்குவோம்


971
பீளைசோரக்கண்ணிடுங்கிப் பித்தெழ மூத்திருமி,
தாள்கள்நோவத் தம்மில்முட்டித் தள்ளி நடவாமுன்,
காளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்று நின்றான்,
வாளைபாயும்தண்டடஞ்சூழ் வதரிவணங்குதுமே. 1.3.4

விளக்கம்:-

கண்ணு சுருங்கி கோழை சேர்ந்து பித்தம் முத்தி கால்கள் வலிக்க தடுமாறி கொண்டு நடந்து வருவதற்கு முன் (இளமையாக இருக்கும் போதே) காளை போல ஒருவன் மாடுகளை மேய்ச்சிக்கிட்டு இருந்தவன், மலையை குடையாக எடுத்து நின்றவன், வாளை மீன்கள் நிறைந்த குளங்கள் உள்ள (எம் கண்ணன் இருக்கும்) திருவதரி வணங்குவோம்!


972
பண்டுகாமரானவாறும் பாவையர்வாயமுதம் உண்டவாறும்,
வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி,
தண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன்,
வண்டுபாடும் தண்துழாயான் வதரிவணங்குதுமே. 1.3.5

விளக்கம்:-

முன்னாடி இளமையில் காமத்தில் ஈடுபட்டவரும், பொண்ணுங்க வாய் அமுதம் (எச்சிலை) பருகிஉண்டவரும் , நல்லா ஜல்சாவா வாழ்ந்தவரும், பழச உரக்க கூறி இருமி கொண்டு
கொம்பு காலால் ஊன்றி ஊன்றி தடுமாறி நடப்பதற்கு முன் (இளமையிலேயே) வண்டு பாடும் அதோடு துளசி மாலையை அணிந்தவன் இருக்கும் திருவதரி வணங்குவோம்!

973
எய்த்தசொல்லோது ஈளையேங்கி இயிருமியிளைத்து
உடலம், பித்தர்ப்போலச் சித்தம் வேறாய்ப் பேசியயராமுன்,
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த,
மைத்தசோதியெம்பெருமான் வதரிவணங்குதுமே. 1.3.6

விளக்கம்:-

ரொம்ப வீக்கான பேச்சோடு வீரமே இல்லாம கோழைதனமா மாறி
லொக்கு லொக்குனு இருமி உடம்பு இளைத்து பயித்தியக்காரன் போல எதோ நனைச்சி ஏதோதோ பேசி சோர்ந்து போவதற்கு முன்னாலே (இளமையாக இருக்கும் போதே) இறைவன், என்னோட தந்தை, ஆதி மூர்த்தி, ஆழமான கடலை கடைந்த,சுடர் விட்டு எரிகின்ற சோதி என்னோட பெருமாள் வசிக்கும் திருவதரி வணங்குவோம்!

974
பப்பவப்பர்மூத்தவாறு பாழ்ப்பது சீத்திரளையொப்ப,
ஐக்கள்போதவுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர்மென் கொங்கை நல்லார் தாம்சிரியாத முன்னம்,
வைப்பும் நங்கள் வாழ்வுமானான் வதரிவணங்குதுமே. 1.3.7

விளக்கம்:-

அச்சச்சே இந்த வயசானவரை (பெர்ச) பாரேன்! கோழைதனமா இருக்காரு
வாயிலிருந்து சீழ் போல கோழை வருது! , உன் ஆளை பாரேன்! (உடனே இன்னொரு பொண்ணு சொல்லும் அய்ய அது உன் ஆளு!. என் ஆளு இல்ல!)என்று இப்படி செப்பு போல மென்மையான முலையுடைய பொண்ணுங்க கேலி பேசி சிரிக்கும் முன், (சின்ன வயசுலேயே) நம்மளோட சொத்தும் வாழ்வும் ஆன (பெருமாள் வசிக்கும்)
திருவதரி வணங்குவோம்!

975
ஈசிபோமினீங்கிரேன்மின் இருமியிளைத்தீர்,
உள்ளம் கூசியிட்டீரென்று பேசும் குவளையங் கண்ணியர்ப்பால்,
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கலுறில்,
வாசம் மல்கு தண்துழாயான் வதரிவணங்குதுமே. 1.3.8

விளக்கம்:-
அட சீ போயா! போ! இங்க இருக்காத! எப்ப பாரு இருமி இருமி உடம்பு ஒல்லியா போச்சு! என்று உள்ளம் கூசும் படி பேசும் தாமரை மலர் போல அழகான கண்கள் உடைய பிகருங்க (பொண்ணுங்க) மேல் இருக்கும் வீணா போன ஒன்னுத்துக்கும் உதவாத பாசத்தை விட்ருங்க! நல்ல வழிக்கு செல்ல விரும்பினால் நல்ல வாசனையுள்ள குளிர்ச்சியான துளசி மாலை அணிந்தவன் வசிக்கும் திருவதரி வணங்குவோம்!

976
புலன்கள்நைய மெய்யில்மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்க ஐக்கள் போதவுந்திக் கண்ட பிதற்றாமுன்,
அலங்கலாய தண்துழாய்கொண்டு ஆயிரநாமம் சொல்லி,
வலங்கொள் தொண்டர்ப் பாடியாடும் வதரிவணங்குதுமே. 1.3.9

விளக்கம்:-

கண்ணு சரியா தெரியாம, காது கேக்காம, வாசனையை உணர முடியாம, நாக்கு ருசி தெரியாம, தொடுகின்ற உணர்வு கூட சரியா இல்லாம, இப்படி ஐந்து புலன்கள் வலிமை இழந்து உடல் முதிர்ந்து வயசாகி எல்லாருக்கும் முன்னாடி வர வெட்கப்பட்டு மனசு கலங்கி வாயிலிருந்து கோழை வெளிவர கன்னா பின்னான்னு உலருவதற்கு முன் அழகா வரிசையா கட்டிய குளு குளுன்னு உள்ள துளசி மாலையை கொண்டு (நம்ம பெருமாளின் )ஆயிரம் பெயர்கள் சொல்லி வலமாக சுற்றி வந்து பணிந்து வேண்டி வரம் கொண்ட தொண்டர்கள் ஆடி பாடும் திருவதரி வணங்குவோம்1

977
வண்டு தண்தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல்வேலி மங்கைவேந்தன் கலியன் ஒலிமாலை
கொண்டு தொண்டர் பாடியாட கூடிடில் நீள்விசும்பில்
அண்டமல்லால் மற்றவர்க்கு ஓராட்சி அறியோமே. 1.3.10

விளக்கம்:-

வண்டுகள் குளு குளுன்னு உள்ள தேனை உண்டு வாழும் திருவதரி நெடுமாலை
தாழை (தென்னை மரத்தில் ஒரு குலை காய்க்கும் முன் இருக்கும் பருவம்)வேலி கொண்ட திருமங்கை நாட்டு மன்னன் கலியன் ஒலிமாலை கொண்டு
தொண்டர்கள் பாடி ஆடி கூடி மகிழ்ந்தவர்கள் வைகுண்டத்தில் இருந்து
உலகெல்லாம் ஓராட்சி புரிவார்கள் என்பதை மற்றவர்கள் அறியவில்லையோ