பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Friday, November 19, 2010

என்ன பாக்கியம் செய்தாய் என் நெஞ்சமே! திருப்பதி ஏழுமலையானுக்கு அடிமை ஆனாயே!




பெரிய திருமொழி

1048
வானவர் தங்கள் சிந்தை போல* என் நெஞ்சமே! இனிது உவந்து*
மாதவம் ஆனவர் தங்கள் சிந்தை* அமர்ந்து உறைகின்ற எந்தை*
கானவர் இடு கார் அகில் புகை* ஓங்கு வேங்கடம் மேவி*
மாண் குறள் ஆன அந்தணற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*.2.1.1


விளக்கம்:-

(எந்த நேரமும் பெருமாளே என்று ) பெரிய தவம் செய்தவரின் மனதில் (என்றும் நீங்காமல்) அமர்ந்து வசிக்கின்ற என்னுடைய தந்தை! (My sweety! வசிக்கும் இடம்) காட்டிலுள்ள வேடர்கள் மலை வேம்பு மரத்தை (எரித்து) இடும் புகை (எங்கும் பரவி இருக்கும்) உயர்ந்த (மலையான திருப்பதி திரு) வேங்கடம் வாழும் மேன்மையான வாமணன் ஆன அறிவு பண்பு இவற்றில் சிறந்த நல்லவர்க்கு (ஏய்! My dear) என் நெஞ்சமே!வானவர்கள் மனதை போல இனிமையாக விரும்பி இன்று (முதல்) (பெருமாள் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்)அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே(வாழ்த்துக்கள்!)

1049
உறவு சுற்றம் என்று ஒன்று இலா* ஒருவன் உகந்தவர் தம்மை*மண்மிசைப்
பிறவியே கெடுப்பான்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
குறவர் மாதர்களோடு* வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்* வேங்கடத்து
அறவன் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 2.1.2


விளக்கம்:-
(தனக்கென்று) உறவு, சொந்தம் என்று ஒன்றும் இல்லாத ஒருவன் (நம் பெருமாள்) (தம்மை விரும்பியர் (யாராக இருந்தாலும் இந்த) பூமியின் மேல் (அவர்களுக்கு ஏற்படும்) பிறவி (என்னும் துன்பத்தை அடியோடு) நீக்குவான். அதனை கண்டு (ஏய்! My dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ!) குறத்தி பொண்ணுங்களோடு வண்டுகள் (சேர்ந்து கொண்டு அழகான) மயக்கும் குறிஞ்சி இசையை பாடும் (திருப்பதி திரு) வேங்கடத்து இறைவன் (நம்மோட) ஹீரோவுக்கு, இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1050
இண்டை ஆயின கொண்டு* தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்* வானிடைக் கொண்டு போய் இடவும்*, அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
வண்டு வாழ் வட வேங்கட மலை* கோயில் கொண்டு அதனோடும்* மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பார்க்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.3

விளக்கம்:-

(பூ) மாலைகள் கட்டி ( கையில் ஏந்தி) கொண்டு போற்றும் தொண்டர்களோடு (சேர்த்து அவரது) உறவினர்களையும் வானத்தில் இருக்கும் (இன்ப வீட்டிற்கு) கொண்டு போய் விடும் (பெருமாளின் நல்ல) குணத்தை கண்டு (My dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ!) வண்டுகள் வாழ்கின்ற (திருப்பதி) வட வேங்கட மலை(யில்) கோயில் கொண்டு அதனோடு (சேர்ந்து) மேலுள்ள (வைகுண்டம் மற்றும்) பிரபஞ்சம் (முழுவதும்)ஆட்சி செய்து இருப்பார்க்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படிஅவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1051
பாவியாது செய்தாய்* என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை* மண்மிசை
மேவி ஆட்கொண்டு போய்* விசும்பு ஏற வைக்கும் எந்தை*
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்* வேங்கட மலை ஆண்டு வானவர்
ஆவியாய் இருப்பார்க்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.4


விளக்கம்:-

பாவம் எது செய்தாய் (எல்லாம் நன்மையே செஞ்சுட்ட போல இருக்கே! My dear) என் நெஞ்சமே! பூமியின் மேல் (எங்கும்) பரவி முன்பு (அன்போடு) தொண்டு செய்தவர்களை (எல்லாம் அலேக்கா) தூக்கி கொண்டு போய் வானத்தில் (இருக்கும் இன்ப வீடு) ஏற வைக்கும் என் தந்தை, ஆயர்பாடியில் உள்ள பொண்ணுங்களுக்கு ஹீரோ! (வானத்தில் உள்ள) மேகங்களை தள்ளும் (படி உள்ள) மேலோங்கிய (திருப்பதி திரு) வேங்கட மலையை ஆண்டு வானத்தில் (உள்ள தேவர்களுக்கும்) உயிராய் இருப்பார்க்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)


1052
பொங்கு போதியும் பிண்டியும் உடைப்* புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை*
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக* என் நெஞ்சம் என்பாய்*
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்* வேங்கடம் மேவி நின்று அருள்*
அங்கண் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.5


விளக்கம்:-

பொங்கி வருவது (போல நன்றாக செழித்து வளரும்) போதி மரமும், அசோக மரமும் உடைய புத்தர் (மேல் பக்தி கொண்டு விரதம் இருக்கும் பௌத்தரும் சமணரும் புத்த) கோவிலுக்கு உள்ளே வாழும் தங்கள் தேவரும் (புத்தரும்) அவர்களும் ஆக (மட்டுமே இருப்பார்கள் ஆனால் My Dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ! அங்கெல்லாம் செல்லாமல்) எங்கும் வானவர்களும் அசுரர்களும் நிறைந்து போற்றி புகழும் (திருப்பதி திரு) வேங்கடத்தில்
(எங்கும்) நிறைந்து நின்று அருள் (செய்யும்) அழகான கண்களையுடைய ஹீரோவிற்கு(நம்ம பெருமாளுக்கு )இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)





1053
துவரி ஆடையர் மட்டையர்* சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்*
தமரும் தாங்களுமே தடிக்க* என் நெஞ்சம் என்பாய்*
கவரி மாக் கணம் சேரும்* வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்புடை*
அமர நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.6


விளக்கம்:-

காவி ஆடை (அணிந்து கொண்டு மொட்டை அடித்து கொண்டிருக்கும்) புத்தர்களும், சமண தொண்டர்களும் ஒட்டுமொத்தமா கொட்டி இருக்கும் (உணவுகளை ஒருவரோடு ஒருவர்
விழுந்தடித்து கொண்டு வயிறு முட்ட) உண்டு பின்னர் உறவுகளும் தாங்களுமே
(என்று உடலை செமையா வளர்த்து) தடித்து (இருப்பர். ஆனால் My Dear) என் நெஞ்சம்
எனப்படும் (நீ! அங்கெல்லாம் செல்லாமல் உடலில் நிறைய) முடியுடைய விலங்குகள்
கூட்டமாக சேரும் (அழகான திருப்பதி திரு) வேங்கடத்தில் கோயில் கொண்ட (வரும் அதுமட்டுமில்லாமல்) பெருமை வாய்ந்த வானத்தில் (வசிக்கும்) தேவர்களுக்கு ஹீரோவான (நம்ம செல்லம் பெருமாளுக்கு) இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாய (வாழ்த்துக்கள்!)

1054
தருக்கினால் சமண் செய்து* சோறு தண் தயிரினால் திரளை* மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
மருள்கள் வண்டுகள் பாடும்* வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்* வானிடை
அருக்கன் மேவி நிற்பார்க்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.7

விளக்கம்:-

(நாங்கதான் உயர்ந்தவர் என்று திமிருடன்) கர்வத்தினால் சமண (மதத்தை பரவ) செய்து, (வரும் சமணர்கள்) சோற்றில் குளிர்ந்த தயிரினால் உருண்டை (செய்து அப்பு அப்புன்னு சாப்பிட்டு) தொண்டை வரைக்கும் (உணவை நிறைய) உண்டு துன்புறுவர். அதை கண்டு என் நெஞ்சம் எனப்படும் (நீ என்ன நன்மை செய்தாயோ! அங்கெல்லாம் செல்லாமல்) மயக்கம் வைக்கும் இசையுடன் வண்டுகள் பாடும் (திருப்பதி திரு) வேங்கடம் கோயில் கொண்டு அதனோடு வானத்திலுள்ள சூரிய (ஒளியாகவும் எங்கும்) பரவி நிற்பார்க்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1055
சேயன், அணியன், சிறியன், பெரியன் என்பதும்* சிலர் பேசக்
கேட்டிருந்தே* என் நெஞ்சம் என்பாய்!* எனக்கு ஒன்றும் சொல்லாதே*
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி* வேங்கடமலை கோயில்
மேவிய* ஆயர் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.8


விளக்கம்:-

(பரம்பொருளான இறைவனை சிலர்) தொலைவில் (உள்ளான்), அருகில் (உள்ளான் என்றும்) சின்னவன் (என்றும்) பெரியவன் (என்றும்) சிலர் பேச கேட்டிருந்தாய்! (அவர்களின் வீண் பேச்சை கேட்காமல் (My Dear)என் நெஞ்சம் எனப்படும் (நீ!) எனக்கு ஒன்றும் சொல்லாமலே (நன்கு வளர்ந்த) மூங்கில்கள் நின்று (கொண்டு) வெள்ளை நிற முத்துக்களை உதிர்க்கும் (அழகிய திருப்பதி திரு) வேங்கட மலை கோயில் (கொண்டு எங்கும்)நிறைந்துள்ள (என் செல்ல கண்ணனுக்கு) ஆயர்களின் ஹீரோக்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1056
கூடி கூடி உரைத்தே உரைத்தாய்* என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்*
பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்தி* காண்கிலார்*
ஆடு தாமரையோனும் ஈசனும்* அமரர் கோனும் நின்று ஏத்தும்* வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.9

விளக்கம்:-

(My Dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ! இந்த உலக மக்களோடு) கூடி கூடி அவர்கள் (டேய் மச்சான் அந்த பிகர பாருடா என்று கூறினால் நீயும் ஆமா மாமே அந்த பிகர் நல்லா இருக்குடா! என்று அவர்கள்) சொல்வதையே (தலையாட்டி நீயும்) சொன்னாய்.(!சிம்ரன், நயன்தாரா, மும்தாஜ், நமீதா கணக்கா இருப்பவங்களை பற்றி) பாடியும் ஆடியும் (அவர்களை நேரில் பார்த்தால்) பணிந்து போற்றி புகழ்பவர்கள் (பரம்பொருளான என் செல்லம் பெருமாளை) காண இயலாதவர்கள்.(ஆனால் என் நெஞ்சமே நீ அவர்களிடம் சேராமல் அழகாக) தாமரை மலரில் (அமர்ந்திருக்கும்) பிரம்மனும், ஈசனும், தேவர்களின் அரசனான (இந்திரனும்) நின்று போற்றி புகழும் (திருப்பதி திரு) வேங்கடத்து (கண்ணன் குடத்தை வைத்து கொண்டு முன்பு ஆயர்களோடு சேர்ந்து) ஆடும் கூத்தனுக்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1057
மின்னு மா முகில் மேவு* தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய*
அன்னமாய் நிகழ்ந்த* அமரர் பெருமானை*
கன்னி மா மதில் மங்கையர் கலிகன்றி* இன் தமிழால் உரைத்த*
இம்மன்னு பாடல் வல்லார்க்கு* இடம் ஆகும் வான் உலகே*2.1.10

விளக்கம்:-

(முன்பு படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மருக்கு) அன்ன வடிவில் வந்து (உபதேசம் செய்தவரும்) தேவர்களுக்கும் (இறைவனான) பெருமாளை அழியாத பெரிய (கனமான) சுற்று சுவரை கொண்ட திருமங்கை (நாட்டு) போர்வீரன் (திருமங்கையன்) இனிமையான தமிழால் கூறிய இந்த சிறந்த பாடலை (என்னை போலவே பெருமாள் மீது ஆசை வைத்து அவருக்கே நான் அடிமை என்ற எண்ணத்தோடு சொல்ல) ஆற்றல் படைத்தவர்களுக்கு இடம் (பெருமாள் வசிக்கும் வைகுண்டமான) வான் உலகம்



திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் தூய தமிழின் சொற்பொருள்

சிந்தை - மனதில், மன உணர்வு
உவந்து - விரும்பி
மாதவம் - உயர்ந்த or சிறந்த தவம் செய்தவர்கள்
உறை - தங்குதல், வாழ்தல்
கானவர் - வேடர்கள், முல்லை மருத, பாலை நிலா மக்கள்
இடு அகராதி
அகில் -,மலை வேம்பு, வேப்பமரத்தை போன்ற ஒரு மரம், நச்சு தன்மை வாய்ந்தது
கார் - கருமை, மேகம்
ஓங்கு - உயரமான, உயர்வான நிலை, ஒசத்தி
மேவி - பரவி - அல்லது கலந்து
மாண் - இறைவன்,. மாண்புமிகு, மேன்மை
குறள் - குள்ளம், வாமன பெருமாள்
அந்தணர் - அறிவு பண்பு முதலியவற்றில் சிறந்தவர் , மிகவும் நல்லவர், பிராமணர்
பூண்டாயே - ஏற்றாயே,மேற்கொண்டாயே
உறவு - பிறந்த குழந்தை மற்றும் திருமணத்தால் வரும் சொந்தங்கள்
சுற்றம் - சொந்தம்
உகந்து - விரும்பி
மண் - நிலம்
மிசை - மேல்
குறவர் மாதர் - ஊர் ஊராக சென்று வாழும் ஓர் இனத்தை சேர்ந்த பெண்கள்
குறிஞ்சி - மலையும் மலையை சார்ந்த இடமும்
மருள் - தெளிவில்லாமல் குழம்புதல், அச்சம்
அறவன் - பெரியவன்,இறைவன்,அறம் செய்வதை தொழிலாக உடையவர்
நாயகன் - தலைவன், கதாநாயகன், ஹீரோ
இண்டை - மாலை வகை, கொடி வகை
ஏத்து – போற்று, புகழ்ந்து
மீமிசை - மிக்கது, மேலிடத்தில்
அண்டம் - பிரபஞ்சம், பூமி, உலகம்
பாவியாது - தீமை எது
பண்டு - பழமை
தொண்டு - சேவகம்
விசும்பு - வானம்
எந்தை - என் தந்தை
கோவி - கோபியர், ஆயர்பாடி வசிக்கும் பெண்கள்
கொண்டல் - மேகம், மழை
உந்து - தள்ளு
உயர் – உயர்ந்த, மேலோங்கிய
ஆவி - உயிர், ஆன்மா
பொங்கு - நுரைத்து மேலோங்கிய
பிண்டி - அசோக மரம்
பள்ளி - படுத்தல், சமணர் படுக்கும் குகைகள்
உறை - வசிக்கும்
நோன்பு - உணவை குறைத்து கொண்டோ அல்லது எளிய உணவை சாப்பிட்டு இறைவனை நினைத்து செய்யும் விரதம்,
தானவர் - அசுரர்
அம்கண் - அழகான கண்
துவரி - காவி நிறம்
மட்டையர் - மொட்டை அடித்த புத்தர்கள்
சமண் - சமண மதம்
மண்டி - உணவுகளை மொத்த அளவில் விற்பனை செய்யும் இடம்
தமர் - சுற்றத்தார்
கணம் - மொத்தமாக வந்து சேரும்
கண் - பெருமை
ஆர் - வாய்ந்த, நிறைந்த, பொருந்திய
கவரி - மயிர்
மா - விலங்கு, மாடு, மான்
அமரர் - தேவர், மரணம் இல்லாதவர்
தருக்கு - கர்வம்
திரள் - உருண்டை ,கூட்டம், சதைபற்றுடன் குண்டாக காணப்படுதல்,
தண் - குளிர்ந்த
மிடற்றிடை - கழுத்து, தொண்டை வரை
நெருக்கு - அழுத்து
அலக்கண் - துன்பம்
மருள் - மயக்க உணர்வு , அச்சம், தெளிவில்லாமல் குழம்புவது
அருக்கன் - சூரியன்
சேயன் - தொலைவில் உள்ளான்
அணியன் - அண்மையில் உள்ளான்
வேய் - மூங்கில்
வெண் - வெண்மை, வெள்ளை நிறம்
சொரியும் – உதிரும்,விழுதல், பொழிதல், கொட்டுதல்
ஆயர் - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
உரைத்து - கூறுதல், தெரிவித்தல்
துணிந்து - , பயமில்லாமல், தைரியம்
எத்தி - போற்றி, புகழ்ந்து
காண்கிலார் - காண இயலார்
ஈசன் - சிவன் ,கடவுள், இறைவன், தலைவன்
கோன் - அரசன்
ஆடு - அங்குமிங்கும் அசைதல்
கூத்தன் - நடனம் செய்பவன்
மின் - மின்னல்
மா - பெரிய
முகில் - மேகம்
மேவு - பரவிய
தண் - குளிர்ந்த
அன்னம் - அன்ன பறவை
கன்னி - அழியாதது
மதில் - சுற்று சுவர்
கலியன் - போர்வீரன்
கலிகன்றி - திருமங்கை ஆழ்வார், கலியைக் கெட்டுவிடச் செய்பவன்
இன் - இனிய
மன்னு - சிறந்த
வல்லார் அகராதி
வான் - வானம்

திருமங்கை ஆழ்வார் பாடிய திருவேங்கடம் - திருப்பதி என்று தற்போது அழைக்க படுகிறது.ஆந்திராவில் உள்ளது. திருப்பதி பெருமாளின் பெயர் ஸ்ரீ ஸ்ரீனிவாசன். நின்ற வண்ணம் அழகாக இருக்கிறார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதும் , அனைவரும் சேர்ந்து சொல்லுவோமா! கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா !




என் அன்பு ஏழுமலையானின் பொன் மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம்!

Tuesday, November 2, 2010

அண்ணா! அடியேன் இடரைக் களையாயே.



பெரிய திருமொழி

1038
கண்ணார் கடல் சூழ்* இலங்கைக்கு இறைவன் தன்*
திண் ஆகம் பிளக்கச்* சரம் செல உய்த்தாய்!*
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய*
அண்ணா! அடியேன்* இடரைக் களையாயே.1.10.1


விளக்கம்:-

கண் (போல பார்த்து கொண்டு வெளியாள் யாரும் நுழைய விடாமல் பாதுகாக்கும் ) கடல் சூழ்ந்துள்ள இலங்கைக்கு இறைவன் (இராவணனின் வலிமை வாய்ந்த) திடமான மார்பை பிளக்க, அம்பை ஒன்றன் பின் ஒன்று வரிசையாக அனுப்பி (இராவணனை அழித்த எங்கள் இராமனே!) விண்ணோர் வழிபடும் (திருப்பதி திரு) வேங்கட உயர்ந்த மலையில் (வாழும் என்) அண்ணா! அடியேனின் துன்பத்தை களையாயே!


1039
இலங்கைப் பதிக்கு* அன்று இறையாய அரக்கர்*
குலம் கெட்டு அவர் மாளக்* கொடிப் புள் திரித்தாய்!*
விலங்கல் குடுமித்* திருவேங்கடம் மேய*
அலங்கல் துளப முடியாய்!* அருளாயே. 1.10.2


பாசுர விளக்கத்திற்கு முன் சிறு குறிப்பு:-

சுமாலி என்பவன் இராவணனுடைய தாயாகிய கேகசிக்குத் தந்தை. அதாவது தாய் வழிப் பாட்டன். இவன் தன் சகோதரர்களான மாலி, மாலியவான் ஆகியோருடன் இலங்கையில் குடிபுகுந்து தேவர்களுக்குப் பல இன்னல்கள் புரிந்து வந்தனர். திருமால் வந்து போர் புரிந்து வென்று மாலி என்பவனைக் கொன்றுவிட, மற்றவர்கள் பாதாளத்தில் பதுங்கிக் கொண்டனர்.(அதாவது மாலியவான், சுமாலி, மாலி என்பவர்கள் இராவணனுக்கு முன்பு இலங்கையை ஆண்டனர்.)

விளக்கம்:-

இலங்கை அரசனான (இராவணனுக்கு) முன்பு (இலங்கையின்) இறைவனான (மாலி முதலிய) அரக்கர் குலமே கெட்டு அவர்கள் (அனைவரும் துண்ட காணோம்! துணிய காணோம்! என்பது போல அலறியடித்து கொண்டு ஓடும்படி) சுற்றி கொண்டே மேலே பறந்து செல்லும் (சக்கர ஆயுதத்தை செலுத்தி அரக்கர்களை) கொன்ற, கருட கொடியோனே!(என் கோவிந்தா!) உயர்ந்த மலை உச்சியான (திருப்பதி) திருவேங்கடத்தில் வாழ்கின்ற (என் கோவிந்தா!) துளசி மாலையை திரு முடியில் (அழகாக அணிந்த என் கோவிந்தா! அடியேனுக்கு) அருளாயே!

1040
நீரார் கடலும்* நிலனும் முழுது உண்டு*
ஏர் ஆலம் இளந்தளிர் மேல்* துயில் எந்தாய்!*
சீரார்* திருவேங்கட மா மலை மேய*
ஆரா அமுதே!* அடியேற்கு அருளாயே. 1.10.3


விளக்கம்:-

(முன்பு உலகம் அழியும் காலத்தில் உலகை காப்பாற்ற) நீரை உடைய கடலும், நிலனும் (மற்றும் உலகம்) முழுதும் உண்டு, (தன் வயிற்றில் வைத்து பாதுகாத்து) அழகான ஆலமரத்து இளம் இலையின் மேலே (ஒன்றும் தெரியாத குழந்தை போல) உறங்கும் (கண்ணனே!) என் தந்தையே! அழகான திரு வேங்கட உயர்ந்த மலை (மேல்) வாழும் (என்றுமே தித்திக்கும்) திகட்டாத அமிர்தமே, அடியேற்கு அருளாயே!

1041
உண்டாய் உறி மேல்* நறு நெய் அமுதாக*
கொண்டாய் குறளாய்* நிலம் ஈர் அடியாலே*
விண் தோய் சிகரத்* திருவேங்கடம் மேய
அண்டா!* அடியேனுக்கு அருள் புரியாயே. 1.10.4

விளக்கம்:-

(பசு மேய்க்கும் பொண்ணுங்க) மேலே கயிற்றால் கட்டி வைத்துள்ள பானைகளில் உள்ள நறுமணம் மிக்க வெண்ணையை அமுதாக உண்டாயே (என் கண்ணா!) . குள்ளமான (வாமன வடிவம் கொண்டு ஒன்றும் தெரியாதது போல மகாபலியிடம் இரண்டடி மண் கேட்க, உன்னை பார்த்து மகாபலி, ஹூம் ஜுஜுபி என்பது போல இரண்டடி தானே எடுத்துக்கோ! என்று சொல்ல உடனே நீ வானளவு உயர்ந்து) இரண்டே அடியில் (உலகத்தை அளந்தாயே என் வாமனா!) விண்ணை தொடுவது (போல காட்சியளிக்கும் உயர்ந்த) மலையான திருவேங்கத்தில் வாழ்கின்ற (உலகத்தை ஆள்பவனே!என்) தேவனே! அடியேனுக்கு அருள் புரியாயே!

1042
தூண் ஆய் அதனூடு* அரியாய் வந்து தோன்றி*
பேணா அவுணன் உடலம்* பிளந்திட்டாய்!*
சேண் ஆர் திருவேங்கட* மா மலை மேய*
கோண் நாகணையாய்!* குறிக்கொள் எனை நீயே.. 1.10.5


விளக்கம்:-

அழகிய தூணை (பிளந்து) அதிலிருந்து நரசிம்ம பெருமாளாய் வந்து தோன்றி, (யாரும்) விரும்பாத (கொடுமைகாரனான) அரக்கன் (இரணியனின்) உடலை (அக்கு வேரா! ஆணி வேரா! ) பிளந்தாயே (என் நரசிம்மா!) பெருமை பொருந்திய (திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் வளைந்த (நெளிந்த) பாம்பான (ஆதிசேஷனை) மெத்தையாக கொண்ட (கோவிந்தா! நல்லா பாரப்பா!) பார்த்து காப்பாற்றுப்பா! என்னை நீயே!




1043
மன்னா* இம் மனிசப் பிறவியை நீக்கி*
தன் ஆக்கித்* தன் இன்அருள் செய்யும் தலைவன்
மின் ஆர் முகில் சேர்* திருவேங்கடம் மேய*
என் ஆனை என் அப்பன்* என் நெஞ்சில் உளானே. 1.10.6

விளக்கம்:-

(இவ்வுலகை ஆளும்) அரசனே! இந்த மனித பிறவியை நீக்கி (என்னை) உன்னுடைய ஆளாக ஆக்கி, எனக்கு இனிமையான நல்ல (கருணை மனதோடு வாரி வாரி) அருள் செய்யும் (என்) தலைவனே! (தலைவா! வானத்தில் பளிச் பளிச்ன்னு மின்னும்)மின்னலோடு மேகங்கள் (ஒன்று) சேர்ந்து (அழகாக காட்சி தரும் திருப்பதி) திருவேங்கடத்தில் வாழும் (கோவிந்தனே! என் செல்லம்!) என் யானை, என் அப்பா! என் நெஞ்சில் உள்ளானே!

1044
மானே மட நோக்கி* திறத்து எதிர் வந்த*
ஆன் ஏழ் விடை செற்ற* அணி வரைத் தோளா!*
தேனே!* திருவேங்கட மா மலை மேய*
கோனே! என் மனம்* குடி கொண்டு இருந்தாயே. 1.10.7

பாசுர விளக்கத்திற்கு முன் கண்ணனின் மாமன் மகள்
அழகான பொண்ணு நப்பின்னை பற்றி தெரிந்து கொள்ளலாமா!:__
கண்ணனின் மாமன் மகள் நப்பின்னை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் நப்பின்னையை திருமணம் செய்ய விரும்பி ஏழு முரட்டு எருதுகளை அடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான்.------நப்பின்னை - கடல்தாயின் அம்சம் - நீளா தேவி

விளக்கம்:-

மான் (போல அழகான கண்களை உடைய) இளமையான (நப்பின்னையை திருமணம் செய்ய வேண்டும்) என்ற குறிக்கோளோடு, (பயங்கரமான) வலிமையுடன் எதிரில் வந்த (ஏழு) எருதுகளை அழித்த, மலையை (கவசமாக) அணிந்தது (போல வலிமையான) தோளா! (செம்ம Arms-டி செல்லம் உனக்கு! என்னோட) தேனே! (திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் (என்னை ஆளும்) அரசே! என் மனம் (என்னும் கோவிலிலே) குடி கொண்டு இருந்தாயே!

1045
சேயன் அணியன்* என் சிந்தையுள் நின்ற
மாயன்* மணி வாள் ஒளி* வெண் தரளங்கள்*
வேய் விண்டு உதிர்* வேங்கட மா மலை மேய*
ஆயன் அடி அல்லது* மற்று அறியேனே.. 1.10.8

விளக்கம்:-

(கண்ணன்) தொலைவில் உள்ளவன் (என்றும்) அருகில் உள்ளவன் (என்றும் சொல்கிறார்கள் ஆனால் அவன் இளநியின் உள்ளே நீர் வந்தது போலே)என் நெஞ்சின் உள்ளே நின்ற மாயக்காரன், (நீல) மணியை (போன்று) பேரொளி (கொண்ட பிரியமான என் ஆனந்த கண்ணன் குளிர்ந்த பனிகள்) வெள்ளை முத்துக்கள் (மேலிருந்து விழுவதை போல) மூங்கில் (மரங்களை) நீக்கி (அழகாக) உதிர்க்கும் (திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் என் அன்பு) கண்ணன் அடி தவிர வேறொன்றையும் (நான்) அறியேனே!

1046
வந்தாய் என் மனம் புகுந்தாய்* மன்னி நின்றாய்*
நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ!*
சிந்தாமணியே* திரு வேங்கடம் மேய
எந்தாய்!* இனி யான் உன்னை* என்றும் விடேனே. 1.10.9


விளக்கம்:-

(என் அன்பே! எம் பெருமானே! நீ) வந்தாய். என் மனம் புகுந்தாய், (என்னை விட்டு) நீங்காமல் நிறைந்து நின்றாய்.(என்றைக்குமே அழிவில்லாத) அணையாமல் (என்றும் நிலையான) கொழுந்து விட்டு எரிகின்ற சுடரே. எங்கள் (நம்பிக்கைக்கு உரியவனே!) நம்பியே! (என்றுமே ஒளி குறையாத ஒசத்தியான உயர்ந்த வகை மணியை போன்றவனே) சிந்தாமணியே! (திருப்பதி) திரு வேங்கடம் வாழ்கின்ற எனது தந்தையே! இனி நான் உன்னை என்றும் விடவே மாட்டேன்.

1047
வில்லார் மலி* வேங்கட மா மலை மேய*
மல்லார் திரள் தோள்* மணி வண்ணன் அம்மானைக்*
கல்லார் திரள் தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லார் அவர்* வானவர் ஆகுவர் தாமே. 1.10.10

விளக்கம்:-

வில்லை உடைய (வேடர்கள்) மிகுந்துள்ள (திருப்பதி திரு) வேங்கட உயர்ந்த மலையில் வாழும் வலிமை வாய்ந்த கனமான பெரிய தோளை (உடைய நீல) மணி (போல வண்ணம் உடைய) இறைவனை, கல்லை (போல) கனமான பெரிய தோளை (உடைய) கலியன் (பாடிய சொல்லால் ஆன) மாலையை (சொல்ல) வல்லவர் (எவரோ) அவர் வானவர் ஆகுவர் தாமே

திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய 10 பாசுரங்களின் தூய தமிழ் சொல்லின் பொருள்

ஆர் - பொருந்திய, ஒலி
திண் - திடமான
ஆகம் – உடல், மார்பு
சரம் - அம்பு ,ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக
செல உய்த்து - செல்லுமாறு அனுப்பி
மேய = பொருந்திய
இடர் - துன்பம், வருத்தம்
களை - நீக்கு
பதி - தலைவன், கணவன் அரசர்
மாள - இறக்க
புள் - பறவை, கருடன்
கொடி புள் - கருட கொடியை கொண்டவன்
திரித்தாய் - திருகாணி போல சுற்றி கொண்டே மேலே செல்வது
விலங்கல் - மலை
குடுமி - உச்சி
அலங்கல் - மாலை, பூமாலை
துளப - துளசி
நீரார் - நீர் பொருந்திய
ஏர் - அழகு
ஆலம் - ஆலமரம்
இளந்தளிர் - புதியதாக வளர்ந்திருக்கும் மென்மையான இளம் இலை
துயில் - உறங்குதல்
எந்தாய் - என் தந்தையே!
சீரார் - அழகு பொருந்திய
ஆரா அமுதே - திகட்டாத அமுதே , இனிப்பு, வீடுபேறு, நிவேதனம், அமிர்தம்
உறி - மேலிருந்து கயிற்றால் பானைகள் தொங்கும்படி இருப்பது உறி எனப்படும்
நறு - வாசனை
நெய் - உருக்கிய வெண்ணெய்
அமுது - அமுதம், சோறு, இனிப்பு, நிவேதனம், வீடுபேறு
குறள் - குள்ளன்
தோய் - படிதல், நனைதல்
சிகரம் - மலையின் உச்சி
அண்டா - தேவனே
ஆய் - அழகு
அரி – சிம்மம், பெருமாள்
பேணா - விரும்பாத போற்றாத
அவுணன் - அசுரன்
உடலம் - உடல்
சேண் - உயரம் உள்ள, ஆகாயம், தூரம்
ஆர் - பொருந்திய
கோண் - வளைந்து
நாகம் - நல்ல பாம்பு
அணை - படுக்கை, தூங்கும் இடம்
குறிக்கொள் - நினைத்து காத்தருள்
மன்னா - அரசனே
இன் - இனிய
அருள் - கருணை, இரக்கம்
மின் - மின்னல்
ஆனை - யானை
அப்பன் - அப்பா
மடம் - இளமையுமுடைய,
நோக்கி - ஒருவரை குறிக்கோளாக கொண்டு
திறத்து - தம் வலிமையினால்
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
விடை - ஆண் விலங்கு, எருது
செற்ற - அழித்த
அணி - உடுத்துவது
வரை - மலை
கோன் –, அரசன்
சேயன் - தொலைவில் உள்ளான்
அணியன் - அண்மையில் உள்ளான்
வாள் - ஒளி, கத்தி
தரளம் - முத்து
வேய் - மூங்கில்
விண்டு - நீங்கி
ஆயன் - இடையன் , ஆடு மாடு மேய்ப்பவன், கண்ணன்
மன்னி - நீக்கமற எங்கும் நிறைந்து
நந்தாத – கெடாத, அணையாத
சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி
வில்லார் - வில்லை உடையவர், வேடர்கள்
ஆர் – பொருந்திய
மலி = மிகுந்த
மல்லார் - வலிமை பொருந்திய
திரள் தோள் - திரண்ட தோள், பெருத்த தோள்




திருப்பதி எம் பெருமான் மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம் !
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!