பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Monday, September 8, 2014

குலசேகர ஆழ்வார் வரலாறு


குலசேகர ஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு
மகனாக,கொல்லி நகரில் கலி 28வதான பராபவ வருடம் மாசி மாதம்
சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில்
பிறந்தார்.இவர் ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் கருதப் படுகிறார்.

இவர் தன் வீரம் மிகுந்த நால்வகைப் படையால் எதிரிகளை வென்று புறம்
கண்டு சேர நன்னாட்டில் அமைதி நிலவச் செய்து செங்கோல் ஆட்சி
செய்து வந்தார். இவர் மன்னர் குலத்தில் பிறந்திருந்தும், படைபலமும்
பெரும் செலவமும் பெற்றிருந்தும், மானுட வாழ்க்கையில் பற்றின்றி
மாலவன் சேவையை மனம் உகந்து செய்து வந்தார். எப்பொழுதும் அவன்
அடியார்களால் சூழப் பெற்றவராய் அவன் நாமம் போற்றியும், அவன்
திருவிளையாடல்களை அடியார்கள் கூறக் கேட்டும் வந்தார்.

திருவரங்கனையும் திருவேங்கடவனையும் மற்றும் அவன் உறையும் மற்ற
தலங்களையும் தரிசித்து அத்தலங்களிலே உள்ள அடியாரோடு இணயும்
நாள் எந்நாளோ என்ற ஏக்கத்தில் இருந்தார்.புராண இதிகாசங்களின் 
சாரமான முகுந்த மாலையைப் பாடி அருளினார்.

ஸ்ரீ வால்மீகி பகவான் அருளிச் செய்த இராம காதையின் மீது மிகுந்த
பற்றுடையவராய் அதை ஓதச் செய்து கேட்டு மகிழ்வதை பொழுது
போக்காய்க் கொண்டிருந்தார். ஒரு நாள் இராமன் சீதைக்குக் காவலாய்
இலக்குவனை நிறுத்தி விட்டுத் தனியொருவராய் கரன் திரிசிரன்
தூஷணன் முதலான பதிநான்காயிரம் அரக்கர்களுடன் போரிடத் துணிந்த
கதை கேட்க நேர்ந்தது. உடனே “என்னப்பன் இராமனுக்கு என்னாகுமோ?
துணையாய்ச் செல்ல எவருமில்லையே?” என்று எண்ணினார். தன் 
நால்வகைப் படையையும் திரட்டி தம் தலைமையில் இராம பிரானுக்கு
உதவி செய்யக் கிளம்பினார்.

இதைக்கண்ட அமைச்சர்கள் அரசர் தம் சொல்லை கோட்கும் மன 
நிலையில் இல்லை என்பதனை உணர்ந்தனர். தூதுவர் போல் சிலரை
அனுப்பி “மன்னா! இராம பிரான் தனியொருவராகவே அந்தப் 
பதிநான்காயிரம் அரக்கர்களை அழித்து வெற்றியுடன் திரும்பினார்” என்று
சொல்லச் செய்தனர். மகிழ்ந்த மன்னரும் படையோடு நாடு திரும்பினார்.

கவலையில் ஆழ்ந்த அமைச்சர்கள் கூடி இத்தகைய குழப்பங்களைத் 
தவிர்க்க என்ன செய்யலாம் என ஆலோசித்தனர். இதற்கெல்லாம்
வைணவ அடியாரோடு வேந்தன் கொண்டிருக்கும் தொடர்பே காரணம்
என்ற முடிவிற்கு வந்தனர். தொடர்பைத் துண்டிக்க ஓர் திட்டமும்
தீட்டினர். அரன்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப்
பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான ஒரு நவரத்தின மாலையை 
எடுத்து மறைத்து வைத்தனர். அரசனிடம் ஆபரணத்தைத் திருடியது
அடியவரே என்று பழி சுமத்தினர். ஒரு குடத்தினுள் நச்சுப் பாம்பொன்றை
இட்டு மூடினர். அடியவர் தாம் குற்றம அற்றவர் எனில் அக் குடத்தில்
கை விட்டு மீள வேண்டும் என்றனர். அரசரோ அடியவரைத் தடுத்து 
அவர்கள் சார்பாக “பரனன்பர் கொள்ளார்” என்று கூறி கோவிந்தனை
வேண்டிக் குடத்தில் கை விட்டு வெற்றிகரமாக மீண்டார். அமைச்சர்கள்
மனம் வருந்தி மன்னன் தாள் பணிந்து நவரத்தின மாலையை சமர்ப்பித்து
மன்னிக்க வேண்டினர்.

அடியாரை மதிக்காத, பொறுக்காத மக்களிடையே வாழ விருப்பற்ரவராய்
சேரலர்கோன் தன் மகனுக்கு முடி சூட்டி வைத்து “ஆனான செல்வத்து
அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்
வேண்டேன்” என்று தன் விருப்பத்திற்குரிய அடியார் குழாத்தோடு 
திருவரங்கம் சென்றடைந்தார். 

              குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்

No comments: